சீன உயர் இராஜதந்திரி இலங்கைக்கு திடீர் விரைவு - ரணில் இந்தியாவால் திரும்பும் வரை காத்திருப்பாம்..
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்தித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜூன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் இந்திய விஜயம்

உலக ஒழுங்கில் ஆசிய பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில், இலங்கையை மையப்படுத்திய உலக வல்லரசு நாடுகளின் நகர்வுகள் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதன் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்த சீனா முயன்றுவரும் நிலையில், இது தமது நாட்டின் நலன்களுக்கு அச்சுறுத்தலானது என இந்தியா கருதி வருகின்றது.
இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இதன் பின்னணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரின் இந்த விஜயத்தை உறுதி செய்துள்ள போதிலும் அதற்கான காரணங்கள் எதனையும் இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிடவில்லை.
யார் இந்த யுவான் ஜியாஜூன்

சீனாவின் லியோவ்னிங் மாகாணத்தின் டொங்ஹுவா பிராந்தியத்தை சேர்ந்த யுவான் ஜியாஜூன், பொறியியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆராய்ச்சியாளரான அவர், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
எனினும் இவரது இந்த திடீர் விஜயத்திற்கான காரணத்தை தூதரகம் அறிவிக்கவில்லை. சர்வதேச விண்வெளி சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் யுவான் ஜியாஜூன் பணியாற்றியுள்ளார்.
ஜுயங் மாகாணத்தின் துணை ஆளுநராகவும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த அவர், 2017 ஆம் ஆண்டு மாகாண ஆளுநராக பெயரிடப்பட்டுள்ளார்.
சீன கமியூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்திய குழுவின் உறுப்பிராகவும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.