உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் ...! CID விசாரணை
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இன்று (25) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள்
பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளியல் வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) குற்றஞ்சாட்டியிருந்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு பல கருத்துக்களை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |