அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை: சிக்கித் தவிக்கும் தேசபந்து தென்னகோன்
தற்போது சிறையில் உள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் (Deshabandu Tennakoon) குற்றப்புலனாய்வுப் பிரிவு (CID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
நீதிமன்றில் சரணடைந்தனர்
இதனைத் தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.
பின்னர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய ஆறு சந்தேக நபர்களும் கடந்த 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனையை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளின் போது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
