கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது
கண்டி (Kandy) நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு விடுத்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒகஸ்ட் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேன கடவல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வழக்கொன்றை ஒத்திவைப்பதற்காக சந்தேகநபர் கடந்த 2ஆம் திகதி நண்பர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி காவல்துறைக்கு இந்த பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.
நேரடி தொடர்பு
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபர், நண்பரின் சிம் கார்டைத் திருடி தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்து உரிய அழைப்பை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் அழைப்பை மேற்கொள்ள பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை EMI இலக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவருக்கும் குறித்த விடயத்திற்கு நேரடி தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் பிரகாரம் சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபரும், தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
