மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் முறுகல்
மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று (4) முன்னெடுக்கப்பட்ட கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
தமிழர்களின் கரிநாள்
இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள், தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், எமது மண் எமக்கு வேண்டும், போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்தனர்.
தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
இந்த நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது எனவே அங்கு செல்ல முடியாது நீங்கள் பிரதான பேருந்து தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்கள் எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது இந்த வீதியால் சென்று காந்தி பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய பகுதிக்கு செல்ல வழிவிடுமாறு காவல்துறையினரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பின்னர் கலகம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து; பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |