இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் மதகுருமார் - பாப்பரசரின் பிரதிநிதி விமர்சனம்
இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கடும்போக்கு பௌத்த பிக்குகள் மீதான கடுமையான விமர்சனம் ஒன்றை சிறிலங்காவுக்கான பாப்பரசரின் பிரதிநிதியான பிரையன் உடைக்வே ஆண்டகை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று மன்னார் மடுத்திருப்பதியில் திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில், அவரின் விமர்சனம் வெளிப்பட்டுள்ளது.
மதத் தலைவர்களுக்கான பாரிய பொறுப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பிரசன்னப்பட்டிருந்த நிலையில் இந்தக்கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
இதன்போது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத்தலைவர்களுக்கு உண்டென சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் தலைவராக மாறுவதா என்பதை சில மதத்தலைவர்கள் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப்பாடு

இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளையும் 13 ஆம் திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாடுகளையும் சிறிலங்காவின் முக்கியமான பௌத்த பிக்குகள் தீவிரப்படுத்திவரும் நிலையில் இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரியபொறுப்பு மதத்தலைவர்களுக்கு உண்டு என்ற செய்தியை பாப்பரசரின் பிரதிநிதி இன்று தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்ததை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்திதெளிவு ஏற்படவேண்டுமெனக்கோரி சிறிலங்காவின் பௌத்த பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்தும் மெதகொட அபயதிஸ்ஸதேரர், நேற்று தனது பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனா ஆலய வளாகத்தில் சிறப்பு பூசை ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மடுதேவாலயத்தின் இடம்பெற்ற திருவிழாவில் பங்கேற்ற பாப்பரசரின் பிரதிநிதி நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கும் மதத்தலைவர்கள் குறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்ததுடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.