ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரம் - அதிபர் ரணில் அறிவிப்பு
இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் புதன்கிழமை (09) நடைபெற்ற இலங்கை தொழிற்சங்க அமைப்பின் 36 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
கடந்த வருடம் இலங்கை தொழிற்சங்க அமைப்பின் வருடாந்த மாநாட்டின் போது நாடு இருண்ட நிலையில் இருந்தது எனவும் அப்போது உங்களில் பலருக்கு இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி இருந்தது. ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவால், எங்களால் அதை மாற்ற முடிந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகையால் , ஒழுங்கான பொருளாதார நிர்வாகத்தை நாம் மேற்கொண்டால் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட முடியும்.
ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ளும் வரை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வுகளைத் தேடவில்லை.
இதன் காரணமாகவே பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது.
மக்கள் போராட்டம்

அரசியல் தலைவர்கள் பொருளாதாரம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்கத் தயங்கியதால் நிலைமை மேலும் மோசமானது. மேலும் இந்த பொருளாதார நெருக்கடியை மக்கள் கடுமையாக உணர்ந்தனர். அவர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில போராட்டங்கள் வேறு கோணத்தில் இருப்பதை போராட்டத்தின் நிறைவில் காண முடிந்தது.
சவாலை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர்

இந்நிலையில் தலைமைத்துவ வெற்றிடம் தென்பட்டது. அன்றிருந்த அரசு சுவரில் நசுக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அதன்போது எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து அரசாங்கத்தை கையளிக்க அதிபர் முயற்சித்தார்.
ஆனால் அந்த சவாலை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் தயாராக இருக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக அதிபர் ஒருவர் மற்றொருவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்க அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது கூட கின்னஸ் சாதனையாகவே நான் கருதுகிறேன்.
அதன்பின்னர் முன்னாள் அதிபர் என்னை நாட்டை பொறுப்பேற்க அழைப்பு விடுத்திருந்தார். தான் பதவி கேட்கவில்லை எனினும் நாடு அப்போதிருந்த நெருக்கடியிலிருந்து மீட்டு , மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். அதன்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் குறுகிய கால தீர்வுகளை வழங்க முடிந்ததுடன். வரிசை யுகத்திற்கும் முடிவு கட்டப்பட்டது.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.