தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், அவை வழங்கப்படுவதன் நோக்கமான பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படாமல், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, “தினன தகுண” அமைப்பு இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூல பதிவு
மேலும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துவதுடன், குறித்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |