சபாநாயகருக்கு எதிரான விசாரணை : மற்றுமொரு முறைப்பாடு பதிவு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Jagath Wickramaratne) எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட செயலாளர் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி இன்று (11) காலை குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விடயங்கள் அடங்கிய அறிக்கையைச் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்குச் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் அறிவித்துள்ளமை விசாரணைகளுக்குத் தடையாக இருப்பதாக அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமிந்த குலரத்ன முறைப்பாடு
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சமிந்த குலரத்ன என்பவரால், கடந்த 2 ஆம் திகதி சபாநாயகருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தல், சட்டவிரோதமாக இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களைப் பயன்படுத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் தகவல்களைக் கோரி சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம் குறித்து, கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, குறித்த கடிதம் மூலம் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தே, ஹர்ஷன ராஜகருணா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |