யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனுக்கு 19 வயதாம்... காவல்துறை ஊடகப் பிரிவின் அதிரடி அறிக்கை
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் முன்னர் தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை ஊடகப்பிரிவு இன்று (11) தெரிவித்துள்ளது.
நேற்று (10) அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.
காவல்துறையினரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் உயிரிழப்பு
இந்தநிலையில் இன்றையதினம் (2026.02.11) காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்" 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி காலை, ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வானை நிறுத்த காவல்துறையினர் சமிக்ஞை செய்தபோது, வான் தொடர்ந்து சென்றது.

காவல்துறையினர் வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வானில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்து பின்னர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வானில் இருந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தேக நபரையும், சித்தங்கேணிபகுதியைச் சேர்ந்த 38 வயதான சந்தேக நபரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் இன்று (11) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நேற்று (10) நீதிவான் விசாரணையின் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை
இறந்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்ததாக அரசு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மேலும் ஒரு சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் டொல்பின் ரக வான் ஆகும். பின் இருக்கை அகற்றப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் (SOCO) உதவியுடன் வாகனத்தை சோதனை செய்தபோது 17 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா, ஒரு வாள், ஒரு கத்தி, ஒரு கயிறு மற்றும் சாணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வான், ஊர்காவற்றுறை பகுதியில் கால்நடை திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமா அல்லது அது வேறு குற்றங்களில் ஈடுபட்ட வாகனமா என்பதை அறிய, ஊர்காவற்றுறை காவல் நிலையமும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் உதவி காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.” என்று காவல்துறை ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |