கண்முன்னால் இறக்கும் கொரோனா நோயாளிகள் - இலங்கையில் ஊடகவியலாளரின் நேரடியான நெகிழ்ச்சி பதிவு
களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப் புத்தகத்தில் மிகவும் வேதனையுடன் பதிவொன்றை இட்டுள்ளார்.
தற்போது நேரம் இரவு ஒரு மணி 20 நிமிடம். இது களுபோவில மருத்துவமனையின் கொவிட் விடுதி. விடுதியின் ஒரு கட்டிலில் இரண்டு மூன்று நோயாளிகள். அவர்கள் முற்றிலும் செயல் இழந்த நிலையில் உள்ளனர். விடுதியின் தரையில் கட்டில்களுக்கு கீழே ஒக்சிசனுடன் படுத்திருக்கும் நோயாளிகள் தங்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தரையில் உள்ள நோயாளிகள் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஏனைய பாதிக்கப்பட்ட நோயாளிகள்(நூற்றிற்கு மேற்பட்டவர்கள்) வெளியே கதிரைகள் மரங்களுக்கு கீழே காணப்படுகின்றனர்.
தரையில் போர்வையுடனும் போர்வை இல்லாமலும் நோயாளிகள் காணப்படுகின்றனர். இன்று காலையில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். சில மணிநேரத்திற்கு முன்னர் என் கண்முன்னால் இருவர் உயிரிழந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் காணப்படுகின்றனர். கடவுள்கள் போல அவர்கள் களைப்பின்றி தங்கள் கடமைகளை செய்கின்றனர்.
எனது தாயார் கொரோனாவிற்காக இவ்வாறு போராடிக்கொண்டிருந்த வேளை எனது தந்தை ஒரு ஒட்சிசன் கருவிக்காக காத்திருந்தார். இதனை விட உதவியற்ற நிலையில்லை. நாளை நானும் பாதிக்கப்படலாம்.
நான் சொல்வதற்கு ஒரு விடயம்தான் உள்ளது. கொரோனாவை குறைத்துமதிப்பிடாதீர்கள் உங்களால் முடிந்தவரை அவதானமாக இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவனமாக கவனித்துக்கொள்ளுங்கள் . நான் இந்தியா குறித்து தெரிவித்த செய்திகளை இன்று நான் கண்முன்னால் பார்க்கின்றேன்.

