சுழிபுரம் விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல்...! பழைய மாணவன் வெளியிட்ட தகவல்
யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.
பாடசாலை மதில் விவகாரம்
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது வலிகாமம் கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளரால் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.
150வது ஆண்டு விழாவுக்கான நிதி சேகரிப்பு
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவர்களின் நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |