மக்களுக்கு பேரிடியாக அமைந்த மற்றுமொரு தகவல் -விரைவில் இருளில் மூழ்கப்போகும் இலங்கை
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால்(Ranjan Jayalal.) தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு முழுவதும் விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்ற அபாய அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சபுகஸ்கந்த அனல் மின் நிலையம் என்பனவும் மூடப்பட்டுள்ளதாகவும், டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எண்ணெய் விநியோகம் செய்யாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும் நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் நிரம்பியுள்ளதால் மேலும் நீர்மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் தலா 300 மெகாவொட் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் இருந்த போதிலும், டொலர் பிரச்சினை காரணமாக அதனை நம்ப முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.