பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் தம்பதி கைது
புத்தளம் - மெல்லன்குளம் பகுதியில் 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் காவல்துறையினரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை
இவர்கள் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைத் தடுத்து வைத்தல்
புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு, வெளிப்பகுதிகளில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தம்பதியினர் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே குறித்த தம்பதியினர் கைதாகியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இந்தத் தம்பதியினர் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதுடன் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்ய காவல்துறையிர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்