சஹ்ரான் குழு ஆன்மீக தலைவரின் வாக்குமூலம்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சஹ்ரானுடன் தொடர்புடைய குழுவின் ஆன்மீகத் தலைவராக அடையாளம் காணப்பட்ட நௌஃபர் மௌலவி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) அளித்த வாக்குமூலம் அவரது சுயவிருப்பத்தின் பேரில் தாமாக முன்வந்து வழங்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை விசாரணை தலைமை நீதிபதி நவரத்ன மராசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகள் ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோரின் ஒருமித்த உடன்பாட்டுடன் வழங்கியுள்ளார்.
நீதிமன்ற விசாரணை
நௌஃபர் மௌலவி 2019 நவம்பர் 11 அன்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் விஜித பெரேரா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை அளித்திருந்தார்.

அந்த வாக்குமூலம் சித்திரவதையின்றி, தானாக முன்வந்து அளிக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதற்காக நீதிமன்றம் ஒரு விசாரணையை நடத்தியது.
அதன் பின்னரே, வாதங்களையும் ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.
நால்வர் அளித்த வாக்குமூலங்கள்
இந்தத் தீர்ப்பின் மூலம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 நபர்களில் நால்வர் அளித்த வாக்குமூலங்கள் தாமாக முன்வந்து அளிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் முதல் குற்றவாளியான முகமது இப்ராஹிம் முகமது நௌஃபர் (அபு சயீத், அபு சரீம், நௌஃபர் மௌலவி), 11-வது குற்றவாளியான காலிப் சமீர், 4-வது குற்றவாளியான முகமது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் 9-வது குற்றவாளியான முகமது ரமீஷ் முகமது சஜித் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 18-வது குற்றவாளியான ரசிக் ரஸா ஹுசைனின் வாக்குமூலமும் இவ்வாறு சுயவிருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்டதா என்பது குறித்த தீர்ப்பை நீதிமன்றம் வரும் ஜூன் 30 அன்று வழங்க திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்