2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில், பௌத்தத் தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்பட்டவரான வணக்கத்திற்குரிய உடுவில சுஜாதா என்ற தேரர், 2023 ஓகஸ்டில் பலப்பிட்டிய உயர் நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனைக்கு எதிராக இந்த மேல்முறையீட்டைச் செய்திருந்தார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் விகாரையில் தங்கியிருந்த ஒன்பது வயது சிறுவனைப் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தேரர் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டார்.
10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
அப்போது உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

2009ஆம் ஆண்டில் விகாரையினுள் உள்ள தேரரின் அறைக்குள் இந்தத் துஷ்பிரயோகம் நடந்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் சாட்சியமளித்திருந்ததை மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் பின்னர் இது குறித்துத் தனது உறவினர் ஒருவரிடம் தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் சாட்சியம்
பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த விபரங்களுடன் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போவதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி (JMO) வழங்கிய மருத்துவச் சான்றுகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதி தரப்பால் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடுகள் அரசுத் தரப்பு வழக்கை வலுவிழக்கச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை என்றும், விசாரணை நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுவனின் சாட்சியத்தை உண்மையென ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் அவதானித்துள்ளது.
இதற்கமைய, குற்றவாளியான தேரரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பலப்பிட்டிய உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |