புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டவருக்கு கொரோனாவா? கிடைத்தது பெறுபேறு
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இல்லை என பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து 09ஆம் திகதி இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் அவர் 10ஆம் திகதி மாலை பச்சைப்புல்மோட்டை பகுதியில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது உயிரிழப்புக் குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மரண விசாரணை அதிகாரிகள், தடையவியல் பொலிசார் ஆகியோர் உடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன் இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறு பணித்துள்ளார்.
குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே உடலமாக காணப்பட்டுள்ளார். இவரது உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசென்று, பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட பின் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.
இதற்கமைய குறித்த நபரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.