கொவிட் தடுப்பூசி வழங்குவதில் வவுனியா புறக்கணிப்பு?
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா மரணம் வட மாகாணத்தில் அதிகமாக பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமும் வவுனியாவும் காணப்படுகின்றது.
மக்கள் தொகையின் அடிப்படையில் வவுனியா மாவட்டம் ஆபத்தான பிரதேசமாக வட மாகாணத்தில் காணப்படும் நிலையில் வவுனியாவிற்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.
இன்று (05) முதல் வட மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த அனைத்து மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந் நிலையில் வவுனியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் அசமந்தமாக செயற்பட்டதையே வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட காரணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சுகாதார செயற்பாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் கொரனா செயலணிக்கு போதுமான தகவல்களை வழங்காமை மற்றும் உயர் இடங்களில் அழுத்தம் பிரயோகத்தித்து காரியங்களை சாதிக்கும் தகுதியின்மை போன்றவையே இவ்வாறான நிலைக்கு காரணமாக அமைகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.