கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று முதலாவது கலந்துரையாடல்!
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் நாட்டின் வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலானது இன்று (23) மதியம் சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது.
சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசகர் Clifford Chance இன் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்
இக்கலந்துரையாடலுக்கு முன்னதாக, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் பரிஸ் கிளப் (club) மற்றும் 23 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றிருந்தனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
