இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
350 வைத்தியர்கள் ஒரேயடியாக ஓய்வு
இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, நாட்டில் மொத்தமுள்ள 654 பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளில் 350 பேர் டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற வேண்டும் என பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் போக்குவரத்து, குடியிருப்பு, கட்டடங்கள் போன்ற வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதால், பிராந்திய மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளின் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மொனராகலை, நுவரெலியா, பதுளை, அநுராதபுரம், குருநாகல், மன்னார், புத்தளம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற தொலைதூரப் பிரதேசங்களில் 30 தொடக்கம் 35 வருடங்கள் பணி அனுபவமுள்ள இக்குழுவினர் பணிபுரிவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இவர்கள் ஓய்வுபெற்று சிறிய கிராமிய வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் சீர்குலைந்தால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சேர்ப்பு அற்ற சேவையாக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் சேவையை 63 வருடங்களாக நீடிக்குமாறு அதிபர், பிரதமர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.