இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை
கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால் தினசரி வர்த்தக நடவடிக்கை சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (07) காலை 9.51 மணியளவில் 30 நிமிடங்கள் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
உலக பங்குச்சந்தைகள்
இது அனைத்து பங்கு விலைக் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.
இதேவேளை, வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987இற்கு பின் நிகழும் மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் சிங்கப்பூரின் (Singapore) பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப்பின் வரி விதிப்பு
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் உயர்வை காட்டியது. அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
