இலங்கை தீவின் தற்போதைய நெருக்கடி குறித்து யாழில் ஆராய்ந்த செயற்பாட்டாளர்கள்
வட கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
யாழ் வேந்தன் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியம் சார்ந்து பொருளாதார நெருக்கடியை எவ்வாறு அணுகுவது, சிங்கள மக்களிற்கும், சர்வதேசத்திற்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு எம் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை கொண்டு சேர்ப்பது, பொருளாதார பிரச்சனைக்கு மூலவேர்க் காரணமான தமிழ் மக்களின் மீதான அடக்கு முறைகளிற்கான தீர்வை பெற்றுக் கொள்ள சிங்கள மக்களிடையே மன மாற்றத்தை தூண்டல், சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என பல கோணங்களில் கருத்துக்களை பரிமாறினர்.
இதேவேளை, ஈற்றில் வடகிழக்கு தழுவிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருங்கிணைப்புக் குழுவும் இதன்போது தெரிவு செய்யப்பட்டது.
தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியான 'உங்களை புரிந்து கொள்கின்றோம் எங்களை புரிந்து கொள்ளுங்கள்' எனும் தமிழ் மக்களின் ஒருமித்த குரலை பல தளங்களில் தொடர்ச்சியான கருத்தாடல்களுடன் முன் கொண்டு செல்வதாக தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.
வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு முதல்வர்கள், சமய, சமூக, தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்கலைக் கழகம் சார் பேராசிரியர்கள், மாணவ பிரதிநிதிகள் மருத்துவர்கள், பொறியியலாளர், வங்கியாளர், ஊடகவியலாளர், கல்வி புலம் சார்ந்தோர் என பல்துறை ஆளுமை சார் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.