UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்
பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி,மான்செஸ்டர், லண்டன் ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களே இவ்வாறு இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் சுமார் 8.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள்
பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையக் குழுமமான மான்செஸ்டர் விமான நிலையக் குழுமம் (MAG), அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் இணையப் பாதுகாப்புச் சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களில் உள்ள வாகன தரிப்பிடம், ஓய்வறை, முன்பதிவுகள் இடங்கள் மற்றும் விமான நிலையத்திற்குள் wifi பதிவு செய்தல் தொடர்பான வாடிக்கையாளர் தரவுகள் பெருமளவில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள் மற்றும் அஞ்சல் குறியீடுகள் உள்ளிட்ட தரவுகள் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்களின் வங்கி அல்லது பணம் செலுத்தும் விவரங்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையங்களில் எந்தவிதமான செயல்பாட்டு இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |