யோஷித ராஜபக்சவின் பாட்டி பணமோசடி வழக்கில் இருந்து விடுதலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா? என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மருத்துவ அறிக்கையில் பரிந்துரை
குறித்த பிரதிவாதி விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை என அந்த மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டெய்சி ஃபொரஸ்ட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, டெய்சி ஃபொரஸ்ட் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |