அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம்: இந்திய தூதரகம் கண்டனம்
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காந்தி சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயோர்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
காந்தி சிலை சேத சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடி விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக இந்திய தூரதக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி மெமோரியல் சர்வதேச அறக்கட்டளையால் 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி 8 அடி உயரமுள்ள சிலை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
