12 வருடங்களாக மகனைத் தேடிய தாய் உயிரிழந்தார்
இறுதிக்கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கைது செய்யப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 98 தாய் தந்தையர் வடக்கு கிழக்கில் உயிரிழந்துள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தாக்கத்தை விட தமது உறவுகளை தொலைத்துவிட்டு நிர்கதியாகி நிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச சமுகம் நீதியை பெற்றுத்தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலின் இறுதி தருணத்தின் போது, ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தும் கையளிக்கப்பட்ட நிலையிலும், கைது செய்யப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கடந்த 4 வருடங்களையும் கடந்து நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர்களில் பலர், காணாமலாக்கப்பட்ட தங்களுடைய உறவுகளின் உண்மை நிலைக் குறித்து அறிந்துக்கொள்ள முடியாமலேயே மரணித்து வருகின்றனர். இதற்கமைய, வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய போராட்டங்களில் கலந்துக் கொண்டவர்களில் 80ற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி 12 வருடங்களாக போராடி வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டர், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோரின் தாயான தேவகி அம்மா என்பவேரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றிய தகவல்கள் எதுவும் அறியாத நிலையிலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த இந்த தாய்க்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.