மனைவியை கொலை செய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை
மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் தீர்ப்பிற்காக இன்றைய தினம் (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோது திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி குறித்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.
மனைவியை கொலை செய்த கணவன்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் மனைவி முஹம்மது பௌஸ் ரஷ்மியா (வயது 29) என்பவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் கணவரான கந்தளாய் - பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் சுபியான் இன்சான் (வயது 38) என்பவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.
மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
வழக்கினை அரச சட்டத்தரணி ரி.தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் தண்டனை சட்டக்கோவை இலக்கம் 296 இன் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் மரண தண்டனைக்கான தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
