திட்டமிட்ட செயற்பாடுகளால் சரிவடைந்த கூட்டுறவு துறை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளால் கூட்டுறவு துறையானது சற்று சரிவடைந்து உள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரூமான வீரசிங்கத்தின் 61வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நிவாரண விநியோகங்கம்
“யுத்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்பட்டு மக்களுக்கு நிவாரண விநியோகங்களை மேற்கொண்டது.

தனியாரோடு போட்டி போடுகின்ற அளவிற்கான நிலைமையில் கூட்டுறவு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் கூட்டுறவு துறையில் சற்று வீழ்ச்சி இருக்கின்றது.
தற்போது வழங்கப்படுகின்ற அசுவசும கொடுப்பனவு போன்ற கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட கொடுப்பினைகள் கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே விநியோகிக்கப்பட்டன.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு அமைச்சரின் பிரதேசத்தில் தரம் குறைந்த நிவாரண பொருட்களை கொடுத்ததாக தெரிவித்து கர்ப்பிணித் தாய்மார்களின் நிவாரணம் தனியார் ஊடாக வழங்கப்படுகின்றது.
நியாயமான கோரிக்கை
இன்று ஏறத்தாழ 10 வருடங்களாக இவ்வாறு தனியார் ஊடாக அந்த நிவாரணம் வழங்கப்படுகின்றது. அந்த நிவாரணம் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டால் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேல் இலாபம் வரும்.
இதனை நான் ஏன் இந்த இடத்தில் கூறுகின்றேன் என்றால், கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவு துறையின் பணிப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் ஆகியன எமது நியாயமான கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் முன்வைத்து எமக்கான செயற்பாடுகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கூறுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |