நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் (STF) உதவியைப் பெற்றுக்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது மோதல் ஆரம்பமாகி ஒரு நாளுக்குப் பின்னரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சன்தன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-07-2026) முதலே காவல்துறையினர் சிறைச்சாலைக்கு வெளியில் தயாராக இருந்தபோதிலும் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை வரும் வரை உள்ளே நுழைவதற்குச் சட்ட ரீதியான அனுமதி இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கைதிகள் சிறைச்சாலையின் மருந்துப் பண்டகசாலையை உடைத்து அங்கிருந்த மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு போதையில் இருந்தமையால் திங்கட்கிழமை காலையாகும்போது நிலைமை மிகவும் கொடூரமாக மாறியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமை அமைதியாக இருந்ததாகப் பதிவாகியிருந்த போதிலும் மருந்துகளை உட்கொண்டதன் காரணமாகத் திங்கட்கிழமை காலையாகும் போது கைதிகள் வன்முறையாக நடந்துகொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் காவல்துறை மா அதிபரிடம் விசேட அதிரடிப்படையின் உதவியைக் கோரி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டது திங்கட்கிழமை (06-07-2026) காலையில்தான் என்றும் அதன் பின்னரே காவல்துறையினர் தலையிட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |