ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு மறுக்கப்பட்ட பயிற்சி -மனித உரிமை குழுக்கள் வரவேற்பு
ஸ்ரீலங்கா காவல்துறைக்கு ஸ்கொட்லாந்து வழங்கவிருந்த பயிற்சியானது, மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயத்தை மனித உரிமை குழுக்களும் ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளதாக ஐ.ரி.ஜே.பி எனப்படும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா காவல்துறையின் கட்டமைக்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான சம்பவங்களை முன்னிலைப்படுத்தி, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த பிரசாரங்கள் காரணமாக இது சாத்தியமானதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா காவல்துறை அணிகளுக்குப் பயிற்சி வழங்குவதை பிரித்தானியா மீளாய்வு செய்ய வேண்டும் என கடந்த 2016 தொடக்கம் தாம் கோரி வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பவங்கள் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஐ.ரி.ஜே.பி தெரிவித்துள்ளது.
போரின் போதும் போருக்கு பின்னரும் தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை, சித்திரவதை செய்தமை, மரண தண்டனை நிறைவேற்றியமை மற்றும் கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்ததை விவரிக்கும் காவல்துறையினர் விசேட அதிரடிப் படையினரின் உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கமானது, குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிரான சிரத்தையான நடவடிக்கைகள் எடுக்கும்வரை அவர்களுக்கான பயிற்சித்திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டுமென தாம் பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத முறியடிப்புக்கென தமது நாட்டு காவல்துறைப் பிரிவுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் பயிற்சியைக் சுட்டிக்காட்டி தம் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு “வெள்ளைச்சாயம்பூசி“ மறைப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தூதுக்குழு முயற்சி செய்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது.
சித்திரவதைகளில் ஈடுபட்டவர்களென குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடைய பெயர்கள் உட்பட, பயங்கரவாத முறியடிப்புக் காவல்துறை திட்டமிட்டே சித்திவதையைப் பயன்படுத்தியது என்பதற்குரிய ஆதாரங்களை தாம் சேகரித்துள்ளதாக யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐ.நா.வுக்கு சமர்ப்பித்த ஆவணத்தில், சிறிலங்கா காவல்துறைக்கு பிரித்தானியா வழங்கும் பயிற்சிகளுக்கான மனித உரிமை மதிப்பீடுகளில் காணப்படும் வெளிப்படையற்ற தன்மை தொடர்பாகத் தாம் கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்ததாக ஐ.ரி.ஜே.பி கூறியுள்ளது.
'சித்திரவதைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிறிலங்கா காவல்துறை அணிகளைச் சேர்ந்த குறைந்தது மூன்று அதிகாரிகளுக்கு பிரித்தானியா முன்னர் பயிற்சி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது என அவ் ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் கூறியுள்ளது.
இருப்பினும், 2012 தொடக்கம், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 90 காவல்துறை அதிகாரிகள் அல்லது அங்கத்தவர்கள் சிறிலங்காவிற்குப் பயிற்சி வழங்குவதற்காக சென்றிருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வழங்கப்படும் அதிகாரிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக பயிற்சி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மீள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 இற்குப் பின்னரான பயிற்சிகள் 'பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலேயே நடைபெற்று வருவதாக பிரித்தானியா அரசாங்கம் உறுதிப்படுத்தியது எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் 'சிறிலங்கா காவல்துறையால் தொடர்ந்தும் பாலியல் வன்புணர்வுகள் நடைபெற்று வருவதான செய்திகள், மிகவும் கவலைதரும் விடயமாக இருக்கின்றது எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.