தமிழர் தாயகத்தின் அடையாளங்கள் சிதைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து
இலங்கையில்(sri lanka) தமிழர் தாயகத்தின் அடையாளங்கள் திட்டமிட்டு சிதைப்பதும், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் தடுக்கப்படவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் பூர்விக தாயகத்தினை முற்றாக விழுங்கி அதன் அடையாளத்தினை சிங்கள பௌத்த சின்னங்கள் மூலம் பிரதியீடு செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் 1948இலிருந்து அரசின் மூல வளங்கள், அதிகாரங்கள், காவல் துறை மற்றும் ஆயுதப் படைகள், சட்டங்கள் என்பனவற்றை பயன்படுத்தி சிறிலங்கா, தமிழர் தேசத்தினை சிதைத்து வருகின்றது.
தமிழர் பாரம்பரிய நிலத்தினை திட்டமிட்டு அழிக்கும் உத்திகள்
வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக பிரிக்கும் முக்கிய நோக்கத்துடன் சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள், யுத்த வெற்றி நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் நில ஒதுக்கீடுகள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வனப் பகுதி ஒதுக்கங்கள், காணி மற்றும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழர் பாரம்பரிய நிலத்தினை திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன.
சட்டங்கள் மற்றும் அதிகாரங்கள் மூலமும் ஆயுத படையினரின் ஆக்கிரமிப்புகள் மூலமும் ஏனைய சமூகங்களின் திட்டமிட்ட குடித் தொகை வளர்ச்சியும் தமிழர் தாயகத்தின் குடித்தொகைப் பரம்பலில் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது.
நில ஆக்கிரமிப்பினை வெளிப்படுத்துவது முக்கியம்
ஆயினும் வடக்கில் தையிட்டி, வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை போன்ற இடங்களிலும் கிழக்கிலே மயிலத்தமனையிலும் தொடர்ச்சியாக போராடி வரும் தமிழ் மக்கள் நில ஆக்கிரமிப்பினை அடையாளபூர்வமாக வெளிக் கொண்டு வருவது மிக முக்கியமான விடயமாகும். உயிர்ப்புடன் இருக்கும் பாரதூரமான பாதிப்புகளை மக்கள் திரள் போராட்ட வடிவத்தில் தொடர வேண்டும்.
இருப்பினும் இப் போராட்டங்களானவை இலங்கை தீவிற்குள் மட்டுமே அடங்கி விடுமாயின் அரசுக்கு எதிராக காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி விட முடியாது போய் விடும். ஈழத் தமிழர்கள் சிறிலங்கவிற்குள் மட்டுமே போராடி நாம் எதிர்பார்க்கும் சாதகமான முடிவுகளை அடைந்து விட முடியாது என்ற யதார்த்தம் கசப்பானது.
உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டும்
சிறிலங்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புகளை ஆதாரத்துடன் ஒன்று திரட்டி, தொகுத்து, இலங்கைக்குள் மட்டுமே நின்று விடாது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் போன்ற முக்கியமான அமைப்புகளின் மூலம் உலக அரங்கில் அம்பலப்படுத்தும் வகையிலான சமாந்தரமான நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும் சிவில் சமூக கட்டமைப்புகளும் மேலும் காத்திரமாக முன்னெடுக்க வேண்டும்.
நில ஆக்கிரமிப்பு குறித்த பல்வேறு ஆவணங்களை பிரித்தானியா தமிழர் பேரவையானது ஆய்வு செய்து வெளியிட்டு வருவதுடன் அரசாங்கத்தின் நில அபகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ச்சியாக முன் வைத்து அங்கத்துவ நாடுகளின் அழுத்தங்களை ஏற்படுத்த வாதாடி வருகின்றது. மாறாக சர்வதேச சக்திகளின் தலையீடுகளை சிறிலங்கா அரசு முற்றாக வெறுத்து ஒதுக்க முற்படுகின்றது.
அன்று போரினால் ஈழத்தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த காரணிகளை மாற்றி அமைக்காமல் கபடத்தனமாக அதனை வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து வருகின்றது. வடக்கு கிழக்கிலே மக்கள் மீள குடியேறி வாழ உகந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல் அங்கே வாழும் தமிழ் மக்களை தம் பூர்விக பூமியிலிருந்து வெளியேற்றும் சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றது.
இதன் மூலம் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் சிங்கள அரசு செயல்பட்டு வருவதை பிரித்தானியா தமிழர் பேரவையானது வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களை தமிழ் மக்கள் நேரடியாக அணுகி தமது சட்டபூர்வமான அதிகாரங்களை நிலைநாட்ட செயல்திறனுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என வேண்டி கொள்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
