பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அவர் இலங்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு துபாய்க்குத் தப்பிச் சென்ற போதிலும், அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அரசின் ஆசி காரணமாக உள்ளூர் உயர் நீதிமன்றங்களில் அவர் மீது பலமான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்குச் சொந்தமான சோல் பீச் ஹோட்டலுக்குத் தேவையான மதுபான உரிமங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரியவருகிறது.
250 மில்லியன் ரூபாய் லஞ்சம்
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்பி-க்கள் மற்றும் காவல்நிலையப் பொறுப்பதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருகை தந்து இலவச உணவு மற்றும் உபசரிப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவையும் அனுபவித்துள்ளதாக கண்டறியப்ப்டுள்ளது.

இந்நிலையில், தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது பதவியை உறுதிப்படுத்துவதற்காக வேண்டிய கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இந்த சோல் பீச் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தியே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பதில் காவல்துறை மா அதிபர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள தேஷபந்து தென்னகோன், ஷிரான் பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அந்தப் பணத்தைக் கொடுக்க ஷிரான் பாசிக் மறுத்ததால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சோல் பீச் ஹோட்டல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாசிக் மகன் - விஜயதாச ராஜபக்ச தொடர்பு
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஹேவ்லோக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் ஷிரான் பாசிக்கின் மகன் நதீம் பாசிக் கைது செய்யப்பட்ட சம்பவமும் கவனத்தைப் பெற்றுள்ளது.

நதீம் பாசிக் அங்கு குடியேறுவதற்கு முன்னர், இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரபல நடிகை ஒருவர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஷிரான் பாசிக்கின் கறுப்பு பணத்தை சலவை செய்வதற்கு இந்த நடிகை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பும் ஆதரவுமே ஷிரான் பாசிக் போன்ற ஒரு கடத்தல்காரர் சர்வதேச அளவில் உருவெடுக்க முதன்மையான காரணியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |