நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு!
இரண்டு வருடங்களின் பின்னர் மகோற்சவம்
கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் மகோற்சவ தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளன.
வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை.
திருடர்கள் கைவரிசை
எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது.

அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் கீழ் விசேட காவல்துறை அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நகை பணம் தொடர்பில் அவதானம்

எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதை தவிர்க்குமாறும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது வீடுகளை சரியாக பூட்டி வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.