செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்!
சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
செம்மணியில் இன்றையதினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், ”சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புகளை மேற்கொண்டு வந்து, 2009இல் அதன் உச்சக்கட்ட செயற்பாடாக சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிறிலங்கா ஆயுதப்படையினராலே மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள்.
அரங்கேற்றப்பட்ட இன அழிப்பு
உணவுத்தடை மற்றும் மருந்து தடை என்பவற்றையும் ஆயுதமாக பயன்படுத்தி அந்த இன அழிப்பு அரங்கேற்றப்பட்டது. கிட்டத்தட்ட 1980ஆம் ஆண்டுகளின் பிற்பாடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்களும் யுதிகளும் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவ குழுக்களினாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பிற்பாடு சந்திரிக்க அரசாங்கத்தினால் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 96ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் எல்லோரும் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இப்போது செம்மணியில் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
இந்த இனப்படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் உள்ளகப் பொறிமுறை மூலம் எந்த விதமான நீதியும் கிடைக்காது என்பது தமிழ் மக்களுடைய உறுதியான நிலைப்பாடு.
எனவே எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான தீர்மானமானது ஐநாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்த பொறுப்பு கூறல் தொடர்பாக 2012ஆம் ஆண்டில் இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் அந்த தீர்மானங்களானது முற்றும் முழுதாக உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்ற தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் காரணமாக இந்த 15 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
யுத்தம் நடைபெறுகின்றபோது இந்த இலங்கை அரசிற்கு முழுமையாக துணை நின்ற ஐநா, யுத்தம் நிறைவடைந்த பின்னர் அந்த இனவழிப்பை மேற்கொண்டவர்களிடமே பொறுப்பு கூறல் விவகாரத்தை ஒப்படைத்துக் கொண்டு வருவது என்பது ஏமாற்றகரமான விடயம்.
சர்வதேச விசாரணை
பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து சிலர் அந்த உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டு வந்ததால் எமக்கு இன்று வரை நீதி கிடைக்காமல் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை பெறுவதற்கும் இந்த உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு பெறுவதற்கு ஒத்துக்கொண்டமையால் இன்று வரைக்கும் அவர்களுக்கான நீதியானது கிடைக்காமல் காணப்படுகின்றது.
ஆகவே இந்த உள்ளகப் பொறிமுறை நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த செம்மணி விவகாரத்தில் கூட மீண்டும் ஜனாதிபதியையே அதை விசாரிக்குமாறு கோரி உள்ளக விசாரணைகளுக்கு வாய்ப்பு கொடுக்கின்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
அந்தத் தவறு இனிமேல் நடக்கக்கூடாது. எங்களைப் பொறுத்தவரை பக்கச்சார்பற்ற ஒரு முழுமையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் எடுக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவர், ஆணையாளர் போன்றவர்கள் இந்த பொறுப்பு கூறல் விவகாரமானது 15 ஆண்டுகள் தோல்வி அடைந்திருக்கின்றது என்ற விடயத்தை ஐ.நா செயலாளருக்கு தெரியப்படுத்தி, அவரிடம் இந்த விடயத்தை பாரப்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
