யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள்
யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள்.
சேதப்படுத்தப்பட்ட மாதா சிலை
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) என்பிபி தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைதொடர்ந்து, இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் என்பிபி தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


