கோட்டாபய நியமித்த ஆளுநர்கள் என்பதால் பதவி நீக்கப்பட்டனர் - மறுக்கும் பொதுஜன பெரமுன
"மாகாண சபை தேர்தல் நடைபெறாத நிலையில் மாகாண ஆளுநர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.
இப்படி மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்படாத காரணத்தால் தான் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்."
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மறுப்பு
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்குமாறு அதிபரிடம் வலியுறுத்தவில்லை.
அதிபர் ரணிலின் விருப்பத்துக்கு ஏற்பவே அண்மையில் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய நியமனத்தால் தான் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டார்கள் என குறிப்பிடப்படுவது முட்டாள்தனம்.
தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில் அதிபரின் நேரடி பிரதிநிதிகளான மாகாண ஆளுநர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.
குற்றச்சாட்டு
ஆனால் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்படவில்லை.
இந்த குற்றச்சாட்டை பொதுஜன பெரமுனவின் மாவட்ட அரசியல்வாதிகள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் பலமுறை முன்வைத்தார்கள்.
அதேபோல், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமும் அதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆகவே, மக்கள் பிரநிதிகளின் வலியுறுத்தலுக்கு அமையவே மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டார்கள்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் நியமனம் என்பதால் பதவி நீக்கப்படவில்லை.
மாகாண ஆளுநர்கள் அதிபரின்பிரதிநிதிகளாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்." எனக் கூறினார்.
