தேசபந்துவின் கைது உத்தரவில் மாற்றம்: சி.ஐ.டிக்கு சென்ற அறிவிப்பு
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை - வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) தவிர்ந்த ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை முன்னாள் கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பின்னர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கைது உத்தரவு
வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சட்டமா அதிபரால் இந்த அறிவிப்பு இன்று(16) விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
