ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா... எதிர்தரப்பு கேள்வி
ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இந்த விடயங்களை ஏற்றுக் கொள்கின்றாரா எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி என்ற போர்வை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஜே.வி.பி. என்ற கட்சியை மறைத்து தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை நம்பியே இளம் தலைமுறையினர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.
அத்தோடு புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்படும் என்றும் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு அப்பால் ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. வன்முறையை மீண்டும் கைகளில் எடுத்துள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக் கொள்கின்றாரா? மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. சட்டத்தின் பேரில் வன்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகத்தை இல்லாதொழித்தல்
நாட்டில் மீண்டும் ஒருபோதும் வன்முறை கலாசாரம் தலைதூக்கக் கூடாது. தமக்கு சவாலாக இருக்கக் கூடியவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றனர். நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர்.
கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் கள்வர்கள் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர் தான் இன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
