யாழ் - வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு
வடமராட்சி - சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வனால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் J/435 கிராம சேவகர் பிரிவே சுண்டிக்குளம் கிராமமாகும்.
அனுமதி பெறுதல்
இங்கு கடற்படையால் சில தினங்களாக நில அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா என 07.07.2025 காலை 09.03 மணிக்கு தொலைபேசி வாயிலாக கேட்டிருந்தேன்.
அது வன ஜீவராசிகள் திணைக்களத்தின் எல்லைக்குள் இருக்கிறது அதற்கு எங்களிடம் அனுமதி பெற தேவையில்லை என தெரியப்படுத்தினீர்கள்.
அதையும் கடந்து கடற்படை அதிகாரிகளிடம் நாம் விவாதித்திருந்தோம். அது நில அளவையாக இருந்தாலும் சரி, நீர் அளவையாக இருந்தாலும் சரி அது பிரதேச செயலகத்திற்கு அல்லது பிரதேச சபைக்கு தெரியப்படுத்தி செய்ய வேண்டும்.
விடுக்கப்பட்ட வேண்டுகோள்
அதை ஏற்றுக் கொண்ட கடற்படை அதிகாரிகள் தாம் பிரதேச செயலகத்திற்கு அறிவித்து இந்த பணியை தொடர்வதாகவும் அது வரை நிறுத்தி வைப்பதாகவும் எம்மிடம் தெரியப்படுத்தினர்.
ஆகவே உங்களிடம் இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் தெரியப்படுத்தும் போது நீங்கள் உடனே அனுமதியை வழங்காமல் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்பினருடன் கலந்து ஆலோசித்து இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

