காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால், இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை இக்கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர் சமூகத்திற்கும் அறிவுறுத்திப்பட்டுள்ளது.
கடல் அலைகளின் உயரம்
அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். என்பதால், இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |
