மனைவியுடன் சண்டை - மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்
இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மின்சார சபைக்கு இழப்பு
நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |