ஈபிடிபியின் தனித்துவத்தை வெளிப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா
தென்னிலங்கை கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வோர் அக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் தான் செயற்பட முடியும். அவர்கள் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
ஆனால் ஈ.பி.டி.பி அவ்வாறானதொன்றல்ல. இதுவே எமக்கான தனித்துவம். எமது இந்த தனித்துவம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் முன்னெடுத்து வந்திருக்கின்றோம் என அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஏளனமாக பார்த்த தமிழ் தரப்பினர்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் ,

மாற்றுக் கொள்கையும் மாற்று வேலைத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நியமாகியும் இருக்கின்றது அன்று நாம் மாற்றுக் கொள்கையுடன் மக்களின் அபிலாசைகளுக்காக திட்டங்களை முன்னெடுத்த போது இதர தமிழ் தரப்பினர் ஏளனமாக பார்த்தனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை பாதுகாக்கவும் இருப்பை தக்கவைக்கவும் தவறானதும் சாதகமற்றதுமான வழிமுறைக்கு சாமரம் வீசியதன் விளைவுகளை மக்களே அனுபவிக்க நேர்ந்தது.
மக்களது உணர்வுபூர்வமான தேவை
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் குணாம்சமான மாற்றம் தென்னிலங்கையில் ஏற்பட்டபோதும் அன்றிருந்த தமிழர் தரப்பில் அது ஏற்படாதிருந்ததன் விளைவாக கிடைக்கவிருந்த தீர்வுகளும் கைநழுவுச் சென்றுவிட்டன.

மக்களது உணர்வுபூர்வமான தேவைகளை உணர்ந்து அதை நிறைவேற்ற சாதகமான வழிமுறைகளை முன்னகர்த்துவது அவசியம். இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இதுவே சாத்தியனானதுமாகும் என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய காலத்திலும் அதுவே சாத்தியமாக்க அதை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |