தமிழகத்தில் பட்டியலின மக்களை அனுமதிக்காத ஆலயத்துக்கு பூட்டு - வழிபாட்டுரிமையில் அநீதி இழைப்பதாக சீமான் கண்டனம்
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியலின மக்கள் அனுமதிக்கபடாத நிலை இரண்டு தரப்பு மோதல்களை உருவாக்கியமையால், மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆலயத்தை தற்காலிகமாக மூடியுள்ளார்.
சுமார் இரண்டு மாத காலமாக நீடிக்கும் இப்பிரச்சினையில் எதுவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றது.
பட்டியலின மக்களுக்கு வழிபாட்டுரிமையை வழங்காமல் அரச தரப்பு கோயிலை முத்திரையிட்டு மூடியமை நியாயமற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பின்னணி
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆலயத்திலேயே பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் பிரச்சனையாக உருவாகியுள்ளது.
சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வரும் இந்த பிரச்சினையில் ஒரு சுமூகமான தீர்வை எட்டும்வகையில் ஐந்து முறை அமைதிக் கூட்டங்கள் நடத்ப்பட்டும் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இதற்குமாறாக, பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழைய விடப்போவதில்லையென கூறி மறு தரப்பு போராட்டமும் இடம்பெற்று வந்த நிலையிலேயே கோயிலை பூட்டிய மாவட்ட நிர்வாகம் அதற்கு அரக்கு முத்திரையிட்டிருந்தது.
அத்தோடு அங்கு பதற்றம் நிலவுவதால், ஆலய சுற்றாடல் மற்றும் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சில கிராமங்களிலும் தீவிர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கண்டனம்
மேலும், நாளைய தினம் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் கோட்டாட்சியர் பணியகத்தில் தத்தமது தரப்பு எழுத்துபூர்வமான விளக்கத்தை வழங்கவும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசத்தரப்பின் இச்செயற்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீமான், குறித்த கோயிலில் வழிபாடு செய்வதற்கு சட்டத்தின் துணையுடன் பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் முன்னெடுக்கப்பட்ட வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தை திராவிடத்தின் பெருமையெனக் கூறும் திமுகவின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பட்டியலின மக்களின் கோயில் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது கோயிலைப் பூட்டுவது வெட்கக்கேடான செயற்பாடு என கண்டனம் தெரிவித்துள்ளார்.