16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு!
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நான்கு மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தமக்கு விதிக்கப்பட்ட 16 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்துக் குற்றச்சாட்டு
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பணியாற்றிய காலத்தில் கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு (Lease) வாகனங்களைப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் சரண குணவர்தன மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணைகளின் முடிவில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்து அவரைக் குற்றவாளியாக அறிவித்தது.
மேல்முறையீடுகள்
இதையடுத்து ஒவ்வொரு வழக்குக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்தோடு 1.8 மில்லியன் (18 இலட்சம்) ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீடுகள் மூலம் மேல் நீதிமன்றத்தினால் தனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தீர்ப்பையும் அபராதங்களையும் ரத்து செய்யுமாறு முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |