இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் அசாதாரண காலநிலை மாற்றம் ஏற்பட்டால் வறட்சிக் காலம் தொடரக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09.04.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாடிய போதே இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நிலவும் வரண்ட சூழலைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக நீரை மிகவும் அவதானத்துடன் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என அறிவுருத்தியுள்ளார்.
வெப்பமான சூழல்
தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மே மாதத்தின் மூன்றாவது வாரத்தின் பின்னரே இந்த வெப்பமான சூழல் படிப்படியாகக் குறையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மே மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு தணிந்தாலும் அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்து செப்டம்பர் வரை வறட்சி நீடிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குடிநீர் மற்றும் பாசன நீர் மேலாண்மைக்கான நீரை நிர்வகிக்க வேண்டியிருப்பதாகவும் எதிர்காலத்தில் நாம் அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |