போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!
நடிகர் ஸ்ரீகாந்த் (Srikanth) போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் ரக போதைப்பொருள் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
போதைப்பொருள் பயன்பாடு
சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசாத், சென்னையில் பெரிய அளவிலான கொக்கைன் கடத்தல் வலையத்துடன் தொடர்புடையவர் என்றும், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொக்கைன் விநியோகித்ததாகவும் பிரதீப் குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு வாங்கி, ஒரு பப்-ல் பயன்படுத்தியதை நேரில் பார்த்தேன்,” என்று பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் விசாரணைக்கு முன்னிலையானார்.
மேலும், இந்த வழக்கில் மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்த் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
காவல்துறையினர், இந்த வழக்கில் மேலும் சில பிரபலங்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வலையத்தை முழுமையாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
