தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி : சாடும் சி.வி.கே.சிவஞானம்
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும், ”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் தெரிவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் தொடக்கம் முதலே ஒரு இறுக்கமான கொள்கை கோட்பாடாகக் கடைபிடித்து வந்திருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சி
இந்தக் கோட்பாட்டை தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு முழுவதும் எந்தப் பிசிறுமின்றிப் பின்பற்றி வந்திருக்கின்றது. இதுநாள் வரையில் ஏனைய தமிழ்க் கட்சிகளும்கூட அதனைப் பின்பற்றி வந்திருந்தன.
ஆனால் இந்த அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றனர். இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறும் செயல்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த அணுகுமுறையை தமிழ் அரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களின் இந்தச் செயல் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானது.
'கொள்கைக்கூட்டு' என்று முழங்கியவர்கள் இப்போது அடிப்படைக் கோட்பாட்டையே தகர்த்து தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்திருப்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
