பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு
கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பத்தரமுல்லை செத்சிறிபாய நிர்வாக வளாகத்தின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் நேற்று (13) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம்
பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம் 25 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

சுமார் 1,359,439 சதுர அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அலுவலக வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 16.7 பில்லியன் ரூபாய் ஆகும்.
அரச அலுவலகங்களை மாற்றும் திட்டம்
கொழும்பு கோட்டை உள்ளிட்ட கொழும்பு நகரப் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் அரச அலுவலகங்களை படிப்படியாக பத்தரமுல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக செத்சிறிபாய 3ஆம் கட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டடம் நிறைவடைந்த பின்னர் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மாணத் திட்டங்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிகபட்ச பயன்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படாமல் ஒட்டுமொத்த அரச சேவை என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் சேவைகளைப் பெறுவதற்கு இலகுவான சூழலை ஏற்படுத்துதல், புதிய வழிகாட்டல் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்