உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு அங்கமான முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) பிற்பகல் நிறைவடைந்தன.
நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர் குண்டுத் தாக்குதல்
2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை அனுராதபுரம், மாவனெல்ல, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி, கொழும்பு, தெஹிவளை போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனையவர்ளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 5 மணி நேரம் முன்