உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கவனத்தின் மையமாக சி.டி. விக்ரமரத்னவில் மரணம்
2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்ல என்று அப்போதைய காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஒகஸ்ட் 25 2021அன்று தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறப்பு அறிக்கை வெளியிட்டபோது, காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நடந்த பல நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி இது நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயலாகத் தெரிகிறது என்றும் அவர் அப்போதைய விசாரணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கியிருந்தார்.
இந்தக் குற்றவியல் விசாரணை முழுமையான இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும், இதுகுறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்
அனுர கருணாதிலக
இந்நிலையிலேயே இதனை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஏராளமான தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ''இந்த மரணம் தொடர்பாக காவல்துறை தற்போது விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு திரு. சி.டி. விக்ரமரத்ன காவல்துறைமா அதிபராகப் பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்க வேண்டும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்
தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் காவல்துறை விசாரணைகளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வாக்குமூலம் வழங்கியதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்த்துக்கு 11.03.2026 தெரியவந்தது.
தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது.
விசாரணை தலையீடு
விசாரணைகளின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தலையீடுகள் தொடர்பில், முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த சோய்சாவுடன் இணைந்து முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்னவும் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக CID அதிகாரிகள் அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்புச் சபை (National Security Council) ஊடாக விசாரணை அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
எனினும், இந்த நீதிமன்ற நடவடிக்கையில் முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்ன மீது எவ்வித நேரடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அவர் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்கிய அதிகாரியாக மட்டுமே குறிப்பிடப்பட்டார்.
ஏப்ரல் 2019 இல் நடந்த குண்டுவெடிப்புகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிர்வாகத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளின.
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்ததற்காகவும் அப்போதைய காவல்துறை மா அதிபர் ஜெனரல் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பின்னர், சீர்குலைந்த காவல்துறை திணைக்களத்தை வழிநடத்தும் பொறுப்பு, பதில் காவல்துறை மா அதிபர் ஜெனரல் சி.டி. விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடுமையான குறைபாடுகள்
11.03.2026 நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை புலனாய்வாளர்களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் (குறிப்பாக அரச புலனாய்வு சேவை - SIS) இடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பில் இருந்த கடுமையான குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் குறித்து இந்த அறிக்கைகள் விசாரிக்கப்பட்டு வந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்குக் கோப்புகளில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளும் அடங்கியிருந்தன.
ஆனால், சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் மூலம், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி அவற்றை மறுத்திருந்தார். இந்த முழு சட்ட நடவடிக்கையும் இறுதித் தீர்ப்பு இன்றி நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது.
37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 35-வது காவல்துறைத் தலைவரின் இந்த திடீர் மறைவுடன், இலங்கை காவல்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான காலகட்டத்தை வழிநடத்திய ஒரு அதிகாரியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.
மேலும், அவரது மரணம் குறித்த விசாரணைகளும், உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்றங்களில் தனித்தனியாகத் தொடர்ந்து நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்